விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

உங்களுக்கென்று தனிப்பட்ட தேவனுடைய திட்டம் (24 May 2014)



ஆண்டவர் உருவாக்கின ஒவ்வொன்றிற்கும் ஒரு திட்டம் வைத்திருக்கின்றார். அது ஒரு நியாயமான செயல்பாடு. பறவைகளின் இறக்கைகள், சிலந்தி வலை, கடல் சிப்பிகள் ஆகிய இவைகளுக்கு எல்லாம் ஒரு தனிப்பட்ட தன்மை உண்டு. மிகச் சிறிய பிராணியிலிருந்து வானத்திலிருக்கும் கிரகம் வரை எல்லாவற்றிற்கும் ஒரு தனித்தன்மையும் சிறப்பு அம்சமும் உண்டு (Design). தேவன் தான் உருவாக்கின எல்லாவற்றிற்கும், உங்களையும் சேர்த்து, ஒரு திட்டம் தன் மனதில் வைத்திருக்கிறார். தாவீது “நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும்” (சங்.139:14) என்று கூறினார். அதுபோல ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒரு தனிப்பட்ட திட்டத்தை தேவன் வைத்திருக்கின்றார் என்று வேதம் தெளிவாகக் கூறுகின்றது. எபேசியர் 5:17இல் “ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள்” என்று வாசிக்கின்றோம். ஒரு திட்டம் இல்லாமல் கிறிஸ்தவர்கள் வாழ தேவை இல்லை. தேவன் ஒவ்வொரு விசுவாசிக்கும் ஒரு திட்டம் வைத்திருப்பதால், விசுவாசிகள் தங்கள் வாழ்விற்கு ஒரு குறிக்கோள் இல்லையே என்று யோசிக்க வேண்டாம்.

நீங்கள் தேவனுடைய பிள்ளையானால், அவரது திட்டத்தில் உங்களுக்கும் பங்கு உண்டு என்பது இரண்டு மடங்கான உறுதி ஆகும். தங்கள் வாழ்க்கைக்கு தேவன் குறித்த திட்டத்தை அறிந்துகொண்ட அநேகரை வேதத்தில் காண்கிறோம். இஸ்ரவேல் தேசத்திற்கு தகப்பனாக தேவனால் உபயோகப்படுத்தப்பட்ட ஆபிரகாமைப் பாருங்கள். ஊர் தேசத்தில் வாழ்ந்த அவர் சுமார் 70 வயதானவர், அவருக்கு தேவன் தமது திட்டத்தைக் காண்பித்தார். அவரிடம் தேவன் “நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ” (ஆதி.12:1) என்று கூறினார். செழிப்பும், கலாச்சாரமும் நிறைந்த ஊரை விட்டு முற்றிலும் தெரியாத அறிவிக்கப்படாத ஒரு இடத்திற்கு ஆபிரகாம் சென்றார்.

தேவன் அவரின் திட்டத்தை ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தினார். “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்” (ஆதி. 12:2,3). இன்று ஆபிரகாமுக்கு தேவன் தமது திட்டத்தை வெளிப்படுத்தி அவரை ஆசீர்வதித்ததைப் போலவே உங்களையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

http://www.vvministry.com/sms_email.html -- தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.

1 Response to " உங்களுக்கென்று தனிப்பட்ட தேவனுடைய திட்டம் (24 May 2014) "