விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

உன்னதமானவரின் மறைவிலே..



உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். சங்கீதம் 91 :1-2

தேவனது பெயர்களின் அர்தத்தை தெரிந்திருந்தால் மட்டுமே அவருடைய தனிமுறைச் சிறப்புகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும். மோசே முட்செடியில் அவருடைய நாமத்தை கேட்ட பொழுது “இருக்கிறவராக இருக்கிறேன்” என்று பதிலளித்தார். இன்றைக்கும் நம் மத்தியில் அவர் இருக்கிறவராக இருக்கிறார். இந்த புதிய மாத்தில் உங்கள் தேவைகளை சந்தித்து ஆசீர்வதிக்க அவர் வல்லவராக இருக்கின்றார். சங்கீதம் 91:1-2 ல் தேவனுடைய நான்கு நாமங்களும் பயன்படுத்தப்பட்டு உள்ளன. 1. தேவன் – எலோயீம் (Elohim), 2. கர்த்தர் – யெகோவா or யாவே (Jehovah or Yahweh), 3. சர்வ வல்லமையுள்ள கர்த்தர் – ஏல்ஷதாய் (El Shaddai), 4. மகா உன்னதமானவர் – ஏல் எல்யோன்(El Elyon). சிருஷ்டிகரான தேவனுக்குரிய எபிரேய நாமம் எலோயீம் (Elohim) ஆகும். வெளிப்படுதுகிறவரான தேவனுக்கு கர்த்தர் (Lord) என அர்த்தம் கொள்ளும் யெகோவா or யாவே (Jehovah or Yahweh) என்பதே. பழைய ஏற்ப்பாட்டில் 6000 தடவைகளுக்கு மேல் தேவன் என்னும் நாமம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மதிய வெயிலில் ரோட்டில் நடந்து செல்லும் போது பகலின் வெயிலுக்கு ஒரு அடைக்கலமாக நிழல் எங்காவது கிடைக்குமா என்றுப் பார்த்து ஒதுங்குவது வழக்கம். அதுப்போல நம்மை காப்பதற்கும் ஒரு நிழல் உண்டு. அது வேறு யாருமல்ல, நம்முடைய சர்வவல்ல தேவனுடைய நிழலே. நாமும் இளைப்பாறும்படியாக ஒரு நிழல் உண்டு. அது சர்வவல்லவரின் நிழல். அந்த நிழலில் நாம் இருக்கும்போது, 91 ம் சங்கீதத்தில் சொல்லப்பட்டிருக்கிற அத்தனை ஆசீர்வாதமும் நம்மை வந்துச் சேரும். நாம் வேறு நிழலை அண்டி வாழ்வோமென்றால் அந்த நிழல் ஒருநாள் நம்மை விட்டு விலகிப் போய் விடும். ஆனால் கர்த்தரின் நிழலோ என்றென்றைக்கும் நம்மை சுற்றி நின்று பாதுகாக்கும். சர்வவல்லவரின் நிழலில் தங்கும்போது நமக்கு அடைக்கலம் உண்டு. ‘எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன்’ (சங்கீதம் 57:1) என்று சங்கீதக்காரனைப் போல அவருடைய செட்டைகளின் நிழலிலே வியாதிகளிலிருந்தும் ஆபதுகளிலிருந்தும் நமக்கு பாதுகாப்பு உண்டு. உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்வருடைய நிழலில் தங்குவான் என்ற வாக்குதத்தம் இந்த மாதத்தில் உங்களுடைய வாழ்வில் நிறைவேறட்டும்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென் விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " உன்னதமானவரின் மறைவிலே.. "

Post a Comment