விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்

ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது (யாக்:5:16)

ஒரு மருத்துவமனையின் அறையில் இரண்டு முதியவர்கள் படுத்தபடுக்கையாய் இருந்து சிகிச்சை பெற்று வந்தார்கள். அந்த அறையில் ஒரே ஒரு ஜன்னல் மட்டும் இருந்தது. அந்த முதியவர்களில் ஒருவருக்கு ஜன்னல் அருகில் படுக்கை இருந்தது. ஆகையால் அவருக்கு அந்த ஜன்னல் வழியாக வெளியே பார்க்க முடிந்தது. அந்த அறையில் இருவர் மட்டுமே இருந்ததால் நாளடைவில் இருவரும் நண்பர்கள் ஆனார்கள். ஒவ்வொரு நாளும் தங்களுடைய வாழ்வில் நடந்த நல்ல மற்றும் துக்க காரியங்களைக் குறித்து பேசுவார்கள். ஜன்னலுக்கு அருகில் இருந்தவர் கிறிஸ்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டிருந்தார். ஆகவே நல்ல காரியமோ அல்லது துக்க நிகழ்வோ, எதை குறித்து பேசினாலும் சந்தோஷமாகவே காணப்படுவார். கிறிஸ்துவின் அன்பை ருசிதிராத மற்றொரு முதியவரோ, தான் தனது பிள்ளைகளால் கைவிடப்பட்டு மருத்துவமனையில் கேட்பாரற்று இருப்பதை நினைத்து வேதனைப்படுவார். அப்பொழுது அந்த ஜன்னலுக்கு அருகில் இருந்த முதியவர், அந்த ஜன்னலுக்கு வெளியே தெரியும் அழகான காட்சிகளை வருணிப்பார். தன் கண்களுக்கு முன்பாக வண்ணமிகு பூக்கள் நிறைந்த தோட்டம் தெரிவதாகவும், வண்ணத்து பூச்சிகளுக்கு நடுவே தேவ தூதர்களைப் போன்ற சிறுவர்கள் விளையாடுவதையும் கூறுவார். அப்பொழுது வேதனைப்பட்ட அந்த முதியவர் கண்களை மூடி அவர் சொல்லும் காட்சிகளை எல்லாம் நினைத்துப் பார்ப்பார். கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட முதியவர், இப்படியாய் இயேசு நமக்காய் ஆயத்தம் செய்திருக்கும் வீட்டில் நாம் நித்திய காலமாய் வாழலாம் என்று அவரைத் தேற்றுவார். பின்னர் அவருக்காய் பாரத்தோடு ஜெபிப்பார். இவருடைய ஆறுதல் வார்த்தைகளினாலும், ஜெபத்தினாலும் மற்றொரு முதியவரும் கிறிஸ்துவை தன்னுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார்.

ஒரு நாள் ஜன்னலுக்கு அருகில் இருந்த முதியவர் உலகைப் பிரிந்து கிறிஸ்துவோடு சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஜன்னல் வழியாக காட்சிகளை பார்த்து சொல்லிய, தன்னக்காக பாரத்தோடு ஜெபித்த நண்பனின் பிரிவால் வாடினார் மற்றொரு முதியவர், சில நாள் கழித்து, தனது நண்பன் சொல்லிய காட்சிகளை ஜன்னல் வழியாக பார்க்க ஆசைப்பட்டு தன்னுடைய படுக்கையை ஜன்னன்லுக்கு அருகில் மாற்றும்படியாய் மருத்துவமனை ஊழியர்களைக் கேட்டுக்கொண்டார். மருத்துவமனை ஊழியர்களும் அவரது படுக்கையை ஜன்னலுக்கு அருகில் மாற்றினர். மிகுந்த ஆசையோடு தனது நண்பன் சொல்லிய காட்சிகளை காணும்படியாய் வெளியே பார்த்தார். ஜன்னலுக்கு வெளியே ஒரு சுவர் மட்டுமே தெரிந்ததைக் கண்டு அதிர்ந்து போனார். மருத்துவமனை ஊழியர்களை அழைத்து தன் நண்பன் சொல்லிய காட்சிகளை விவரித்து கூறினார். அப்பொழுது அந்த ஊழியர்கள் ஜன்னலுக்கு அருகில் இருந்த அந்த முதியவரின் பார்க்கும் திறன் பல மாதங்களுக்கு முன்பே செயல் இழந்ததாய்க் கூறினர். தன்னுடைய வேதனைகளை மாற்றி ஆறுதல்படுத்தவே அவர் அவ்வாறு கூறியுள்ளார் என்பதை உணர்ந்து அவருடைய நல்ல உள்ளதிற்க்காய் தேவனுக்கு நன்றி கூறினார் அந்த முதியவர்.

கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்து போகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார்.'' (லூக்கா 22:31,32).  இந்த வசனத்தில் இயேசு பேதுருவுக்காய் வேண்டினதாக குறிப்பிடுகின்றார். ஆகவே வரவிருந்த பெரிய சோதனைக்கு தப்பினார் பேதுரு. இயேசுவே தன்னோடு கூட இருதவர்களுக்காய் ஜெபிதிருன்கின்றார் என்றால், அவரை விசுவாசித்து அவர் வழியில் நடக்கும் நாமும் ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ண வேண்டும். ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாய்ப் பேச வேண்டும். இன்றைக்கு அநேக சபைகளுக்கு செல்லும் விசுவாசிகள் தங்களுக்கு அருகில் இருப்பவர்களோடு பேச மாட்டார்கள். ஆசீர்வாத ஜெபம் முடிய வீட்டிற்கு வேகமாய் சென்று விடுவார்கள். கிறிஸ்துவை உண்மையாய் உள்ளத்தில் ஏற்றுக் கொண்டவர்கள் சபைக்கு வரும் புதிய மனிதர்களிடம் சென்று ஆறுதலாய்ப் பேசுவார்கள். பலவித போராட்டங்களோடு சபைக்கு வரும் மக்களின் விடுதலைக்காய் பாரத்தோடு ஜெபிப்பார்கள். பின்னர் அவர்களை சந்திக்கையில் அவர்களை ஆறுதல்படுத்தி பேசுவார்கள். இதை வாசிக்கின்ற நீங்கள் சபைக்கு பாரத்தோடு வரும் புதியவர்களோடு அல்லது முதிவர்களோடு ஆறுதலாய்ப் பேசுகின்றீர்களா? இல்லையென்றால் ஒருவருக்காய் ஒருவர் ஜெபிக்க உங்களை அர்ப்பணியுங்கள்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

1 Response to " ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள் "