விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

வியப்பூட்டும் உண்மை (31 May 2014)



மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். சங்கீதம் 8:4

நிலவை மனிதன் எட்டிவிட்டபடியால், ஏதோ விண்வெளி அனைத்தையும் ஜெயித்துவிட்டதாக எண்ணிக் கொள்கிறான்! ஆனால், பரந்து கிடக்கும் விசாலமான விண்வெளி இன்னமும் நம் கற்பனைக்கு எட்டாததாகவே இருக்கிறது!!. உதாரணமாய் சில நட்சத்திரங்களின் தூரத்தை சற்று எண்ணிப்பாருங்கள். நம் கண்களுக்குப் புலப்படும் சமீபமான நட்சத்திரம் "ஆல்ஃபா செண்டவுரி " ஆகும். அந்த நட்சத்திரத்தின் தூரம் 40,000 பில்லியன் கிலோ மீட்டர் ஆகும்! நீங்கள் "ஒளியின் வேகத்தில்" பயணம் செய்தால் சந்திரனை 1/2 செகண்டிற்குள் அடைந்துவிடலாம். சூரியனை 8/2 நிமிடத்திற்குள் அடைந்துவிடலாம். ஆனால் ஆல்ஃபா செண்டவுரிக்கு சென்றிட 4/2 ஆண்டுகள் பயணம் செய்ய வேண்டும்!! நாம் தொலைதூர கருவியின் மூலமாய் கூட்டம் கூட்டமான நட்சத்திரங்களைக் காண்கிறோமே....அவைகள் சுமார் 6,500 மில்லியன் ஒளியின் பயண ஆண்டுகளுக்கு அப்பால் உள்ளன!!

இப்போது நட்சத்திரங்களின் அளவை சற்று எண்ணிப்பாருங்கள். "ஓரியன் பெல்ட்டில்" அமைந்துள்ள "பெட்டல்கஸ்" என்ற நட்சத்திரத்தின் விட்ட அளவு 500 மில்லியன் கிலோ மீட்டர் ஆகும். இந்த நட்சத்திரம் வெறும் கூடாக இருந்தால் பூமி அதன் உள்ளேயே சூரியனை தன் வழக்கமான ஓட்டப்பாதையில் சுற்றிவர முடியும். ஏனெனில், சூரியனை பூமி சுற்றிவரும் சுற்றுப்பாதையின் விட்ட அளவு 300 மில்லியன் கிலோ மீட்டர் தூரமே ஆகும்!!

இத்தனை மகத்துவமுள்ள விண்ணகத்து கோள்கள் தங்கள் தங்கள் ஓட்டப்பாதையில் எத்தனை நேர்த்தியாய் பிழையேதுமில்லாமல் சுற்றி வருகின்றன என்பதையும் சற்று சிந்தித்துப் பாருங்கள். நிச்சயமாய் இந்த அண்ட சராசரங்களுக்குப் பின்பாக ஓர் "மகா உன்னத அறிவுக்கூர்மை" இருக்கத்தான் செய்கிறது. அம் மகத்துவ அறிவுகூர்மையே ஒவ்வொரு நட்சத்திரத்தையும் , கிரகங்களையும் திட்டம் வகுத்து படைத்திருக்கிறது!!. விண்ணின் விரிவுதான் எத்தனை விசாலமாயுள்ளது! மனிதனோ எத்தனை சிறியவன்!! பரிசுத்த வேதாகமத்தில், "நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கு அவன் எம்மாத்திரம்!" என தாவீது இராஜா என்பவர் எழுதி வைத்துள்ளார்.

ஒரு பொருளின் மதிப்பை அதன் ’அளவை" வைத்து மதிப்பிட முடியாது. ஒரு கோடீஸ்வரனுக்கு ஏராளமான ஏக்கர்கள் நிலம் இருக்கலாம். ஆனால், அவ்வளவு பெரிய நிலத்தைக் காட்டிலும் வீட்டில் இருக்கும் அவனுடைய சிறு குழந்தையே அவனுக்கு விலையேறப்பெற்ற பொக்கிஷம் ஆகும்! இதைப் போலவேதான் தேவனுக்கும் உள்ளது. விண்வெளி பரந்து விரிந்ததாய் இருக்கலாம். நட்சத்திரங்கள் மகாப் பெரிய அளவுடையதாக இருக்கலாம். ஆனால் தேவனோ, தான் படைத்த எதைக் காட்டிலும் மனுஷனையே அதிகமாய் நேசித்து அக்கறை காட்டுகின்றார். தேவனோடு மனிதன் ஐக்கியம் கொள்வதற்கென்றே, அவன் தேவனுடைய பிள்ளையாக சிருஷ்டிக்கப் பட்டான். இவ்வாறு தேவனோடு கொண்டிடும் ஐக்கியமே, நாம் இப்பூமியில் வாழும் நோக்கத்தை அர்த்தமுள்ளதாகச் செய்கிறது!!

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

http://www.vvministry.com/sms_email.html -- தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.

0 Response to " வியப்பூட்டும் உண்மை (31 May 2014) "

Post a Comment