விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

எல்லா நிலையிலும் தேவனோடு..(30 May 2014)



நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். சங்கீதம் 23:4

ஒரு சமயம் தேவ பக்தன் சாதுசுந்தர்சிங் அவர்கள் கர்நாடகா மாநிலத்திலுள்ள ஒரு பட்டணத்துக்கு பிரசங்கிப்பதற்காக வந்திருந்தார். அங்குள்ள ஒரு பழைய மிஷன் பங்களாவில் அவரும், அவரது மொழிபெயர்ப்பாளரும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை அங்கு தங்கச் சொன்ன மனிதர் இரவில் அந்த இரண்டு பேரும் கட்டிலிலேயேதான் இருக்க வேண்டும் என்றும், எக்காரணத்தைக் கொண்டும் அவர்கள் கட்டிலிலிருந்து கீழே இறங்கக் கூடாது என்றும் திட்டமாக கேட்டிருந்தார். காரணம், அந்த இடத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் கூட பாம்புகள் வரக்கூடும் என்று சொல்லி அவர்களை எச்சரித்து வைத்திருந்தார்.

இரவில் சாதுசுந்தர்சிங்கும், அவருடைய மொழிபெயர்ப்பாளனும் தங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த தனி தனி கட்டிலில் படுத்துக்கொண்டனர். இரவின் மிகவும் பிந்திய நேரத்தில் தாங்கள் படுத்திருந்த அறையில் பாம்பு ஒன்று ஊர்ந்து செல்லும் சத்தம் கேட்டு மொழிபெயர்ப்பாளன் எழுந்து தனது டார்ச் விளக்கைப் போட்டுப் பார்த்தார். உண்மைதான், பாம்பு ஒன்று அவர்கள் அறையில் ஊர்ந்து சென்றுகொண்டிருந்தது. அவர் மிகவும் பயந்து போய் சாதுசுந்தர்சிங் பாதுகாப்பாக தனது கட்டிலில் படுத்திருக்கின்றாரா என்று பார்க்க அவரது கட்டிலை டார்ச் விளக்கு போட்டு பார்த்தபோது அவர் கட்டிலில் காணப்படவில்லை.

அவர் அந்த அறையின் ஒரு மூலையில் முழங்கால்களில் நின்று தனது ஆண்டவரோடு ஆழ்ந்த ஜெபநிலையில் உறவாடிக்கொண்டிருந்தார். அவருடைய முகம் தேவப்பிரசன்னத்தால் பிரகாசித்துக் கொண்டிருந்ததை மொழிபெயர்ப்பாளர் ஆச்சரியத்துடன் கண்டார். உண்மைதான், பூமியில் எந்த ஒரு காரியமும் ஆண்டவரோடு உறவாடி மகிழ்ந்து ஆனந்திப்பதிலிருந்து சுந்தரை தடுத்து நிறுத்த இயலவில்லை. பாம்புகளின் நடமாட்டம் குறித்து அந்த மிஷன் வீட்டு மனிதர் எத்தனைதான் எடுத்துச் சொன்னாலும் சுந்தர் அதை சற்றும் காதில் போட்டுக்கொள்ளாமல் தனது நேச கர்த்தரோடு வழக்கம்போல ஜெப தியானத்தில் மூழ்கிவிட்டார். மரண இருளில் நடந்தாலும் கூட தேவன் தன்னோடு இருக்கின்றார். எந்த ஆபத்தும் தன்னை அனுகாது என்று சாதுசுந்தர்சிங் அவர்கள் தேவன் மேல் கொண்டிருந்த விசுவாசம் எத்தனை பெரியது. நாமும் தேவ பக்தன் சாதுசுந்தர்சிங் போல சூழ்நிலைகளை கண்டு பயப்படாமல் எல்லா நிலையிலும் தேவனோடு இணைந்திருப்போம். அதிசயம் காண்போம்.

கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

http://www.vvministry.com/sms_email.html -- தினமும் உங்கள் E mail முகவரிக்கு கர்த்தருடைய செய்தியையும் வேத வசனத்தை உங்கள் மொபைலுக்கு SMS மூலமாகவும் பெற விரும்பினால் கொடுக்கபட்ட LINK-ல் உள்ள படிவத்தை நிரப்பவும்.

0 Response to " எல்லா நிலையிலும் தேவனோடு..(30 May 2014) "

Post a Comment