விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

கருவில் உற்பவித்த காலம் முதல்


நான் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன். முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும். சங்கீதம் 71:6,9

தாவீது அரசர் தான் கருவில் உற்பவித்த காலம் முதல் தனது முதிர்வயதுவரைக்கும், தேவன் தன்மீது காண்பித்த இரக்கங்களையும், அவரது வழிநடத்துதல்களையும் நினைத்துப் பார்த்து மேற்க்கண்ட சங்கீதத்தை எழுதினார். நாம் எப்போதாவது இவ்விதமாக நமது வாழ்வில் தேவனின் இரக்கங்களையும், அவரது அளவிடமுடியாத கிருபைகளையும் எண்ணிப் பார்த்ததுண்டா? அவர் நமது வாழ்வில் செய்த நன்மைகளை நினைத்து பார்த்து நன்றி சொல்லியதுண்டா. நமது வாழ்வில் தேவன் நமக்கருளிய கிருபைகளை எண்ணி துதிததுண்டா?. 

ஒரு குயவன், ஒரு பாத்திரத்தை தனக்கு உகந்த முறையில் எப்படியாக வனைந்து கொள்ளுகிறானோ, அப்படியே தேவனும் நம்மை அவருக்கேற்ற பாத்திரமாய் வனைய விரும்புகிறார். நாம் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்க வேண்டும். ஆனால் பலவேளைகளில் நாம் நம்மை ஒப்புக்கொடுக்கிற பாத்திரங்களாய் இராமல், தேவனை நோக்கி, ‘ஏன் என்னை இப்படியாக வனைந்தீர்என்று கேள்வி கேட்கும் பாத்திரங்களாய் மாறிவிடுவதுமுண்டு. இது வேதனைக்குரியதல்லவா! இன்று சிலருக்கு தங்கள் தோற்றத்திலே திருப்தியில்லை; சிலருக்கு வாழும் வாழ்க்கையிலே திருப்தியில்லை. கிடைத்திருக்கும் ஆசீர்வாதங்கள், வசதிகளிலே திருப்தியில்லை. எப்பவுமே அதிருப்தியுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். நாம் எப்படி வாழுகிறோம்?

கருவில் தோன்றியதுமுதல் முதிர்வயது வரைக்கும் நம்மை வழிநடத்த, நம்மை உருவாக்கிய தேவன் ஆயத்தமுள்ளவராய் இருக்கிறார். ஆனால் நாம்தான் அவர் கைகளில் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்க பின்நிற்கிறோம். அது பல தீதான வழிகளுக்கு நம்மை இட்டுச்செல்லும். இன்றே தீர்மானிப்போம். நம்மை அவரது கரங்களில் ஒப்புக்கொடுத்து, அவரது பலத்த கைக்குள் அடங்கி வாழப் பழகிக்கொள்ளுவோம். தாயின் கருவில் என்னை உருவாக்கியவரே, முதிர் வயதிலும் வாழ்நாள் முழுவதிலும் காத்து நடத்த வல்லவராயிருக்கின்றார்.


கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பராக. ஆமென்
கிறிஸ்துவின் பணியில்
விசுவாசத்தில் வாழ்க்கை ஊழியங்கள்

0 Response to " கருவில் உற்பவித்த காலம் முதல் "

Post a Comment